அகமதாபாத்: குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் திடீரென மழை பெய்ததால், ஆட்டம் 8 மணிக்கு தாமதமாக தொடங்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் 4 ஓவர்கள் நிதானம் காட்டிய சுப்மன் கில், அடுத்த ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினார். இதன் காரணமாக குஜராத் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சாஹா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் சேர்ந்தார். இங்கே தொடங்கிய அதிரடி எங்குமே நிற்கவில்லை. 32 பந்துகளில் சுப்மன் கில் அரைசதம் கடக்க, மும்பை அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் திணறினர்.
ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியும் பறந்துகொண்டே இருந்தது. இதனால் டெத் ஓவர்களில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் வீரர் ஆகாஷ் மத்வாலை ரோகித் சர்மா மீண்டும் அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரில் மூன்று இமாலய சிக்சர்கலை விளாசி சுப்மன் கில் பேயாட்டம் ஆடினார். இதையடுத்து உடனடியாக பியூஷ் சாவ்லா வீசிய 13வது ஓவரில் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாசி கில் மிரட்டிவிட்டார்.
இதனால் 49 பந்துகளில் சதம் விளாசி சுப்மன் கில் அசத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் ஒரே ஐபிஎல் தொடரில் 800 ரன்களுக்கு மேல் குவித்த 3வது வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். அதேபோல் ரசிகர்கள் சுப்மன் கில்லை இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் என்று புகழ்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் விளாசும் கில், அடுத்த பந்திலேயே ஏதும் நடக்காதது போல் சிங்கிள் ரன்கள் சேர்ப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஆட்டத்தை சச்சின், விராட் கோலிக்கு பின் சுப்மன் கில் செய்து வருவதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானத்தை தனது கோட்டையாக சுப்மன் கில் மாற்றியுள்ளார்.