அகமதாபாத்: கேப்டன்சியை பொறுத்தவரை எந்த முன் திட்டமிடலுடனும் களமிறங்காமல் சூழலுக்கு தகுந்தாற் போல் முடிவு எடுப்பேன் என்று குஜராத் அணியை கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், கேப்டனாக உள்ளுணர்வு சொல்வதை தான் அதிகமாக கேட்பேன் என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்த சூழலில், மும்பை அணி வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. நடப்பு சீசனில் டிஃபெண்ட் செய்வதில் குஜராத் அணிக்கு சில பிரச்சனைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தப் போட்டியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் பிட்ச்சில் எப்படி விளையாட வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் உலகிற்கு ஒரு பாடத்தையே எடுத்து காட்டியுள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால், புதிய பந்தில் ஸ்விங் எடுபடும், டி20 கிரிக்கெட்டில் அட்டாக் செய்வது மட்டுமே எந்த அணியையும் காப்பாற்றும் என்று ஹர்திக் பாண்டியா கேப்டனாக ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டார். இன்னும் சொல்லப் போனால் தோனியை போல் உள்ளுணர்வை வைத்து கேப்டன்சியை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் குஜராத் அணியின் வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், கேப்டனாக எந்த திட்டத்துடனும் நான் களமிறங்க மாட்டேன். எப்போதும் சூழலுக்கு ஏற்ப முடிவை எடுப்பதுதான் என்னோட ஸ்டைல். டி20 கிரிக்கெட்டில் இரு சிக்சர்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றிவிடும். அதனால் கேப்டன்சியை பொறுத்தவரை என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதைதான் கேட்பேன். நானும், எங்கள் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் ஒரே மனநிலை கொண்டவர்கள். அதனால் எங்கள் முடிவும் ஒன்றுபோல் இருக்கும்.
இன்றையப் போட்டியில் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத்தை வைத்து அட்டாக் செய்வது என்பது எளிமையான திட்டம். ஏனென்றால் கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட் இருவரும் அதிகமாக வேகப்பந்துவீச்சில் மட்டுமே விளையாடியவர்கள். அதனைதான் எதிர்பார்ப்பார்கள். இருவரும் மிகப்பெரிய ஹிட்டர்கள் என்பதால், அவர்களுக்கு ஸ்பின்னர்களை வீச வைத்தோம். அவர்களும் சுழலில் சிக்கிவிட்டார்கள். இன்றையப் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு செல்லக் கூடாது என்று திட்டமிட்டோம்.

ஏனென்றால் கடைசி ஓவர் வரை சென்ற சில போட்டிகள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. அபினவ் மனோகரை பொறுத்தவரை, கடினமாக பயிற்சி செய்து களமிறங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் வலைப்பயிற்சியில் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால் எங்களை பொறுத்தவரை குஜராத் அணியின் சிறந்த டெத் ஓவர் பேட்ஸ்மேன் அவர்தான். கடந்த சீசனிலேயே சில மாற்றங்களை செய்யக் கோரி அபினவ் மனோகரிடம் பேசினோம். எதில் முன்னேற்றம் தேவை என்பதை அறிவுறுத்தினோம். அதனை மாற்றி இந்த சீசனில் களமிறங்கியுள்ளார். அதற்கான ரிசல்ட்டை அனைவரும் பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தார்.