அகமதாபாத்: குஜராத் அணியின் ரஷித் கான் வீசிய ஒரே ஓவரில் மும்பை அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் 13 ரன்களிலும், திலக் வர்மா 2 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை குவித்துள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மும்பை அணி எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் பஞ்சாப் அணியுடன் மிஸ் ஆனதை குஜராத் அணியிடம் பெறுவதற்கு மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
200 ரன்களுக்கு மேல் இலக்கை அடிக்க வேண்டும் என்பதால், மும்பை அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அகமதாபாத் பிட்ச்சில் கிடைத்த ஸ்விங்கை பயன்படுத்தி முகமது ஷமியும், ஹர்திக் பாண்டியாவும் மும்பை பேட்ஸ்மேன்களை டான்ஸ் ஆட வைத்துவிட்டனர். இதன் பலனாக ரோகித் சர்மா 8 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு பக்கம் இஷான் கிஷன் பேட்டில் பந்து கடைசி வரை படவே இல்லை.
பவர் பிளேவின் முதல் 5 ஓவர்களில் மும்பை அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்க, 6வது ஓவரை வீச ரஷித் கான் அழைக்கப்பட்டார். அத்துடன் மும்பை அணியின் பவர் பிளே கனவு முடிவுக்கு வந்தது. 6 ஓவர்கள் முடிவில் 29 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. தொடர்ந்து நூர் அஹ்மத் வீசிய 7வது ஓவரில் கேமரூன் க்ரீன் ஒரு சிக்சர் விளாசி அசத்தினார்.
ஆனால் 8வது ஓவரை வீசிய ரஷித் கான் பந்தில் இஷான் கிஷன் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக வந்த திலக் வர்மாவும் அதே ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் முதுகெலும்பே உடைந்தது போல் ஆனது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.