ஐதராபாத்: மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக நிச்சயம் விளையாடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேமரூன் கிரீன் 64 ரன்கள் அடித்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ஐதராபாத் மைதானத்தில் எனக்கு ஏராளமான நினைவுகள் உள்ளது. ஐதராபாத் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி, ஒரு கோப்பையை வென்றிருக்கிறோம். இங்கு மீண்டும் வெற்றிபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானதாக உள்ளது. ஐபிஎல் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால், நிச்சயம் வெற்றியை பெற்று கொடுப்பார்கள்.
மும்பை அணியின் திலக் வர்மாவை கடந்த சீசனிலேயே அனைவரும் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் அவரின் அணுகுமுறை என்னை பிரமிக்க வைக்கிறது. அவர் எந்த பந்துவீச்சாளரையும் பார்த்து பயப்படாமல், அவர்கள் வீசும் பந்துகளுக்கு மட்டுமே கவனம் கொடுத்து ஆடுகிறார். எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக திலக் வர்மா நிச்சயம் ஆடுவார். அதேபோல் அர்ஜுன் டெண்டுல்கரை பொறுத்தவரை 3 ஆண்டுகளாக மும்பை அணியுடன் உள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கரால் கிரிக்கெட்டையும், அவரின் ஆட்டத்தையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அவர் திறமை மீதும், பந்துவீச்சின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணியின் திட்டம் என்ன என்பதை கேட்டு, அதனை சிறப்பாக செயல்படுத்துகிறார் என்று தெரிவித்தார்.