ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி, ஷிகர் தவான், வார்னர் ஆகியோர் 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றதில்லை. இதனால் இன்றையப் போட்டியில் வரலாற்றை மும்பை அணி மாற்றி எழுதுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மும்பை அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அபார அரைசதம் விளாசினார். அதேபோல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்திருந்தார். இதனால் இன்றையப் போட்டியில் இருவரும் தங்களது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா, 6 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி 6,844 ரன்களுடன் முதல் இடத்திலும், 6,477 ரன்களுடன் ஷிகர் தவான் இரண்டாம் இடத்திலும், 6,109 ரன்களுடன் வார்னர் 3வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு 6 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா அசத்தியுள்ளார்.

மும்பை அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வந்தார். ஆனால் அதனை மாற்றும் வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளையாடி வருகிறார். இதனிடையே நடராஜன் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா, 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.