அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி விளையாடுகிறது.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மும்பை போராடி தோல்வியடைந்தது. இந்தப் பக்கம் குஜராத் அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் ட்விஸ்ட் வைத்து அபாரமாக வெற்றிபெற்றது. இதனால் குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும், கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து பெரிய பங்களிப்புகள் வரவில்லை.
அதனால் இன்றையப் போட்டிக்காக அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ரஷித் கானுக்கு எதிராக ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரஷித் கானை எப்படி ரோகித் சர்மா எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரே ஓவரில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சின் மீது அனைவரின் கண்களும் இருக்கும் என்பது நிச்சயம்.
மும்பை அணிக்கு உள்ள ஒரேயொரு சாதகம், அந்த அணியின் பியூஷ் சாவ்லா அஹமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். குஜராத் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் 6 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இதனால் அவரின் அனுபவம் மும்பை அணிக்கு கைக் கொடுக்கும். குஜராத் அணியை பொறுத்தவரை கடந்த சீசனில் மும்பை அணியிடம் சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதற்கு பதிலடி கொடுக்க சொந்த மண்ணில் தயாராகி வருகிறது. அந்த அணியின் டேவிட் மில்லர் மட்டும் ஃபார்மில் இல்லாததால் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அவரும் லெக் ஸ்பின்னர்களுக்கு திணறி வருவதால், பியூஷ் சாவ்லாவை அவர் எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நடப்பு ஐபிஎல் சீசனில் அஹமதாபாத் மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில், மூன்றிலும் சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு குறையாமல் சேர்த்தால் மட்டுமே வெற்றியை பற்றி யோசிக்க முடியும். இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.