ஐதராபாத்: ஐதராபாத் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடுகிறது. இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் களமிறங்குவதால், ஹாட்ரிக் வெற்றியை பெறப்போகும் அணி யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது
16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது. ஐதராபாத் அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. கடந்த இரு போட்டிகளில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தியுள்ளதால், முழு பலத்துடன் உள்ளது. குறிப்பாக அந்த அணியின் ஹாரி ப்ரூக் மற்றும் மார்கரம் இருவரும் ஃபார்மிற்கு வந்திருப்பது அச்சறுத்தலான அணியாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராகுல் த்ரிப்பாட்டி, அபிஷேக் ஷர்மா, கிளாஸன் உள்ளிட்டோரும் எந்த நேரத்தில் அதிரடிக்கு மாறக் கூடியவர்கள். இன்னும் மயங்க் அகர்வால் மட்டுமே ஃபார்முக்கு வராமல் உள்ளார். அதேபோல் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார், நடராஜன் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே அசாத்தியமாக பந்துவீசி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பெங்களூரு, சென்னை அணிகளிடம் தோல்வியடைந்தாலும், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தி ஃபார்முக்கு வந்துள்ளது மும்பை அணி. அதேபோல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இருப்பினும் மும்பை அணியின் பந்துவீச்சு பியுஷ் சாவ்லாவை மட்டுமே நம்பியுள்ளது. மீதமுள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள். இதனால் ஐதராபாத் அணியை ஒப்பிடும் போது மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனம் வெளிப்படையாக தெரிகிறது. அதேபோல் கடந்த போட்டியில் அறிமுகமான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 2 ஓவர் பந்துவீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஆனால் எந்த விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இந்த ஒரு நேருக்கு நேர் மோதியுள்ள 19 போட்டிகளில் 10ல் மும்பையும், 9ல் ஐதராபாத் அணியும் வென்றுள்ளன. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.