மும்பை: மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா நிறுத்தியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளின் கேப்டன் பதவி என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் அடைய துடிக்கும் பொறுப்பு என்றே சொல்லலாம். பஞ்சாப் அணியை போல் ஆண்டுக்கு ஒரு கேப்டன் என்று மாற்றாமல், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேப்டனை பொறுப்பை மாற்ற மாட்டார்கள். அணி நிர்வாகங்களால் மாற்ற முடியாத அளவிற்கு அந்த கேப்டன் வெற்றியை பெற வேண்டும் என்பதோடு, ரசிகர்களின் அன்பையும் பெற வேண்டும்.

தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு எவ்வளவு பேர் ரசிகர்கள் என்று யாரும் சொல்ல தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் அந்தந்த அணி நிர்வாகங்கள் நடத்தும் நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள், பொறுப்புகள், சர்வதேச விளம்பர ஒப்பந்தங்கள் என்று அந்த இரு அணிகளின் கேப்டன்களின் பிராண்ட் வேல்யூ எகிறிவிடும்.
அதற்கு முதலில் அந்தந்த அணி நிர்வாகங்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இந்த இரு அணி வீரர்களுமே அந்தந்த அணி நிர்வாகங்களின் நம்பிக்கையை பெற்றதன் காரணமாகவே இவர்களின் வார்த்தைகளுக்கு அணி நிர்வாகங்கள் ஆதரவளிக்கிறார்கள். தற்போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 36 வயதாவதால், அடுத்த கேப்டனுக்கான தேடலில் அந்த அணி உள்ளது.
அதற்காகவே குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணி தங்களின் பக்கம் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவே மும்பை அணியின் கேப்டனாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில நேரங்களில் அமைதியாகவே இருப்பதே சிறந்த பதில் என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாகவே கொண்டு வந்தது பும்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் பும்ரா, கேப்டன்சிக்கான ரேஸில் இருந்தவர். ஹர்திக் பாண்டியாவின் வரவால் பும்ராவுக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பும்ரா பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதனால் மும்பை அணியில் இருந்து அவர் விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.