துபாய்: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை நடத்த உள்ள முதல் பெண்ணான மல்லிகா சாகர் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் தொடங்கியுள்ளது. இந்த மினி ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் ஏலம் விடுவதற்கான இறுதிப்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருந்து 10 அணிகளுக்கு தேவையான 30 வெளிநாட்டு வீரர்கள், 47 இந்திய வீரர்கள் ஏலத்தின் மூலமாக வாங்கப்படவுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் ஒவ்வொரு அணிகளின் சார்பாக ஆண் நிர்வாகிகளே பங்கேற்பார்கள். அதேபோல் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, மும்பை அணியின் உரிமையாளரான நீட்டா அம்பானி, ஐதராபாத் அணி உரிமையாளரான காவ்யா மாறன், கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் உள்ளிட்ட சில பெண்களே ஏலத்தில் டேபிளில் இருப்பார்கள்.
இந்த நிலையில் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தையே பெண் ஒருவர் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். 16 ஆண்டு கால ஐபிஎல் ஏல வரலாற்றில் ஏலதாரராக ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதிலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ஏலம் விட்டபோது எட்மெடாஸ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார். ஆனால் இம்முறை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் ஏலதாரராக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருகிறார். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார்.
2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார். இது ரசிகர்ளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை அணிகளின் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மல்லிகா சாகர் எப்படி ஏலத்தை நடத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.