மும்பை: மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் ரசிகர்கள் பலரும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். மும்பை அணியின் ஜெர்சியை கொழுத்துவது, அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வதை நிறுத்துவது என்று பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பிய போதே, கேப்டன் பதவி கொடுத்தால் மட்டுமே வருவேன் என்று சில விதிமுறைகள் விதித்ததாக தகவல் வெளியாகியது. இதனால் ஹர்திக் பாண்டியாவை ஏற்க ரசிகர்கள் தயக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மும்பை அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்மறை விமர்சனங்கள் தான் அதிகமாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக அறிமுகமானவர் தான். மும்பை அணிக்காக அவர் அறிமுகமானதில் இருந்து விலகியது வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
அதேபோல் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா இருவரும் மும்பை அணிக்கு விஸ்வாசமாக இருந்தவர்கள் என்பதையும் அறிவேன். ஆனால் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு சென்றுவிட்டு இப்போது மீண்டும் திரும்பியுள்ளார். இருப்பினும் எதிர்மறை விமர்சனங்களை பார்க்க கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. மும்பை நிர்வாகத்தின் செயல்பாடுகள் ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.
என்னை பொறுத்தவரை மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா கூடுதல் அனுபவத்துடன் வந்ததற்கு மகிழ்ச்சியடைய வேண்டும். நிச்சயம் அவர் வரவேற்கப்பட வேண்டியவர். ஒருவேளை அவரால் ஐபிஎல் கோப்பையை வென்றால், ரசிகர்கள் நிச்சயம் ஆதரவாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.