லண்டன்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மோசமாக விமர்சித்ததற்காக வருத்தப்படுவதாக இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட்டில் இருந்து எந்த இளம் வீரர் அறிமுகம் செய்யப்பட்டாலும் அவரை அந்நாட்டு மீடியாக்களும், சக வீரர்கள் ஓவர் பில்டப் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வீரரின் பேட் ஸ்விங், ஷாட் தேர்வு, ஸ்பின்னர்களை வெளுப்பது, டெக்னிக் என்று வர்ணித்து தள்ளுவார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் பெரிதாக எதையுமே செய்ய முடியாமல் திணறுவார்கள்.

அப்படியாக ஊதி பெருக்கப்பட்ட பலூன் போன்ற வீரர் தான் ஹாரி ப்ரூக். கடந்த ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு, கேப்டன் பென் ஸ்டோக்ஸே பில்டப்பை கூட்டினார். இதனால் ஐபிஎல் ஏலத்தின் போது இங்கிலந்து அணியின் ஹாரி ப்ரூக்கை ஐதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 190 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதனிடையே முதல் சில போட்டிகளில் சொதப்பிய போது ஹாரி ப்ரூக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அப்போது கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய அவர், இந்திய ரசிகர்களின் வாயை அடைத்ததில் மகிழ்ச்சி என்று ஓபனாக பதிலடி கொடுத்தார். ஆனால் அதன்பின் ஹாரி ப்ரூக் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் க்ரீஸில் கதகளி ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் நெருங்கியுள்ள சூழலில், இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், இந்திய ரசிகர்களை விமர்சித்ததற்காக வருந்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஹாரி ப்ரூக் பேசுகையில், நான் ஒரு முட்டாள். இந்திய ரசிகர்கள் குறித்து முட்டாள்தனமான விஷயத்தை அந்த நேர்காணலில் கூறியிருக்க கூடாது. அதற்காக வருந்துகிறேன். ஐபிஎல் தொடரின் போது ஹோட்டலில் அதிக நேரம் ஓய்வெடுக்க முடியும்.
அப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரை பார்த்து கொண்டிருந்த போது, சில தேவையில்லாத விமர்சனங்களை பார்க்க நேர்ந்தது. அந்த சம்பவத்திற்கு பின் சோசியல் மீடியாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்து கொண்டேன். இப்போதும் நான் சோசியல் மீடியாவில் இருக்கிறேன். ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு தனியாக அட்மின் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.