மும்பை: ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ள பிரித்வி ஷாவின் வீடியோ வெளியாகிய நிலையில், அவரின் எடை மேலும் அதிகரித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின், சேவாக், லாரா ஆகியோரை கொண்டு கலந்து செய்த கலவை தான் பிரித்வி ஷா என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார். அதற்கேற்ப 18 வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து சதம் விளாசியிருந்தாலும், அடுத்தடுத்து காயம், ஊக்க மருத்து பயன்படுத்தியதால் தடை, களத்திற்கு வெளியில் ஏற்பட்ட மோதல் என்று லைம்லைட்டிலேயே இருந்தார் பிரித்வி ஷா.

இதனிடையே ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என்று பேசப்பட்டவர், இந்திய அணியில் இடம்பிடிக்கவே தற்போது போராடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் மோசமாக விளையாடியதால், டெல்லி அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பிரித்வி ஷாவின் பெயரும் இருந்தது.
இதற்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பிரித்வி ஷா ஆடிய ஆட்டமே காரணமாக அமைந்தது. ஆனால் கவுண்டி கிரிக்கெட்டின் போது பிரித்வி ஷா காயமடைந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக ஓய்வில் இருந்தார். காலில் காயம் ஏற்பட்டதால், உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த அவர் என்சிஏ-வில் ரிஷப் பண்ட் உடன் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை பிரித்வி ஷா தொடங்கியுள்ளார். டெல்லி அணியின் ஜெர்சியுடன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவர் கொஞ்சம் கூட ஃபிட்னஸ் உடன் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடை கூடியிருந்த பிரித்வி ஷா, தற்போது மேலும் எடை கூடியிருப்பது கண் கூடாக தெரிகிறது. இதனால் இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.