மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தை அதிகரிப்பதற்கு ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா சிறந்த ஆலோசனையை அளித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா. 10 மாதங்களாக ஓய்வில் இருந்த பும்ரா, சரியாக ஆசிய கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என்று இரு தொடர்களிலும் பும்ராவின் செயல்பாடுகள் வேற லெவலில் இருந்தது. உலகக்கோப்பை தொடரில் மட்டும் 11 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பும்ரா ஒரு பக்கம் ரன்களை கொடுக்காமல் அழுத்தம் கொடுக்க, மற்ற வீரர்கள் விக்கெட்டுகளை அறுவடை செய்தனர். இதன் மூலம் பும்ராவின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. அதேபோல் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், கட்டர்ஸ், யார்க்கர், பவுன்சர் என்று அனைத்து வகையான பந்துகளையும் பும்ரா தனது பந்துகளை கொண்டுள்ளார். தேவையென்றால் 145 கிமீ வேகத்திலும் வீச முடியும்.
ஆனால் பும்ரா 135 முதல் 140 கிமீ வேகத்திலேயே வீசி வருகிறார். இதற்கு அவரின் ஷார்ட் ரன் அப்பும் காரணமாக அமைந்துள்ளது. ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், கம்மின்ஸ், ரபாடா உள்ளிட்டோர் அதிக வேகத்தில் வீசுவதற்கு அவர்களின் நீண்ட ரன் அப்பும் காரணம். இந்த நிலையில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பும்ராவின் வேகத்தை அதிகரிக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நீரஜ் சோப்ரா பேசுகையில், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவை மிகவும் பிடிக்கும். அவரின் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமான ஒன்றாகும். எனக்கு தெரிந்து, பும்ரா அவரின் வேகத்தை அதிகரிக்க கொஞ்சம் நீண்ட ரன் அப்பை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஈட்டி எறியும் வீரராக, நாங்கள் தொடர்ந்து பவுலர்கள் எப்படி அவர்களின் வேகத்தை அதிகரிக்கலாம் என்று பல நேரங்களில் ஆலோசன மேற்கொண்டுள்ளோம்.
அப்போது அவர்களின் ரன் அப்பை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டோம். எனக்கு எப்போதும் பும்ரா ஸ்டைல் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பும்ரா 16 முதல் 18 அடிகள் மட்டும் ரன் அப்பாக வைத்து கொள்வார். அதிலும் முதல் 10 அடிகளை நடந்தே கடந்து விடுவார். இதனால் அவரின் வேகம் 140 கிமீ-க்கு அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.