பெங்களூர்: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்க கேஎல் ராகுல் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுலின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேஎல் ராகுல், அதன்பின் 6 மாதங்கள் ஓய்வில் இருந்தார். ஓய்வுக்கு பின் ஆசிய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசி ஃபார்முக்கு வந்த கேஎல் ராகுல், உலகக்கோப்பை தொடரின் இந்திய அணி மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக செயல்படலாம் என்று கேஎல் ராகுல் எடுத்த முடிவு இந்திய அணிக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக பலனை அளித்தது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக செயல்பட முடிவெடுத்தார் கேஎல் ராகுல். அதன்படி விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் களமிறங்கி தென்னாப்பிரிக்கா மண்ணிலேயே சதம் விளாசி அசத்தினார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள கேஎல் ராகுலுக்கு, இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அண்மையில் முடிந்த ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் கூட கேஎல் ராகுலை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்களுக்கு பின் டி20 அணிக்கு திரும்பிய நிலையில், கேஎல் ராகுல் கண்டுகொள்ளப்படவில்லை.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க கேஎல் ராகுல் வேறு திட்டத்தை கையில் எடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை அணி ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஃபார்ம் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் இம்முறை தொடக்க வீரராக அல்லாமல் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் கேஎல் ராகுல் எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து லக்னோ அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடனும் கேஎல் ராகுல் ஆலோசித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சமீப காலங்களில் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடி வரும் கேஎல் ராகுல், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 2வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படும் நிலை உருவாகும். இதனால் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.