சென்னை: மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அணியின் கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வருவதால், அவர் தான் ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்ட ரோகித் சர்மா, கடந்த 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

மும்பை அணிக்கு இதுவரை 158 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள ரோகித் சர்மா, 87 வெற்றி, 67 தோல்வியுடன் உள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக வருவதற்கு முன் மும்பை அணி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை. ஆனால் கேப்டன்சியை ஏற்ற ஆண்டு முதல் மும்பை அணியின் நம்பர் 1 அணியாகவும், அதிக கோப்பைகளை வென்ற அணியாகவும் மாற்றினார் ரோகித் சர்மா.
ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் 2025 சீசன் முதலே கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்காலத்தை சிந்தித்து உடனடியாக மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
2008 ஆண்டு முதல் இப்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இடையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா சில போட்டிகள் கேப்டனாக செயல்பட்டாலும், மீண்டும் தோனியின் கைகளுக்கு கேப்டன்சி வந்து சேர்ந்தது. இதன் மூலம் மும்பை, டெல்லி, ஆர்சிபி அணிகளில் எத்தனை கேப்டன்கள் மாறினாலும், சிஎஸ்கே அணிக்கு தோனி மட்டுமே கேப்டனாக இருந்து வருகிறார்.
கேப்டன் என்ற பெயரில் வெறும் கேப்டனாக மட்டும் இல்லாமல் இப்போது ஃபிட்னஸின் உச்சத்தில் இருப்பது தான் தோனியின் ஸ்டைல். அதேபோல் அனைத்து போட்டிகளையும் தன்னால் மட்டுமே வெல்ல முடியாது என்ற போது, தோனி அதற்கேற்ப சிஎஸ்கே அணியை மாற்றியதன் மூலம் சிஎஸ்கே அணி உச்சத்தில் உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் GOAT கேப்டன் தோனி தான் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.