மும்பை : ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் மும்பை அணியின் முன்னாள் நிர்வாகி பார்த்தீவ் படேல் ட்வீட் செய்துள்ளார்.
அண்மையில் மும்பை அணியின் கேப்டனாக செய்தியாளர்களை சந்தித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் 5 மாதங்களாக ஓய்வில் இல்லை. 3 மாதங்களாகவே காயமடைந்து ஓய்வில் இருந்தேன். அதன்பின் என்சிஏவில் 2 மாதங்கள் பயிற்சி மேற்கொண்டேன். உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் ஹர்திக் பாண்டியா வெண்டுமென்றே தவிர்த்தது தெரிய வந்தது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் மனசோர்வு காரணமாக சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனும், ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்கவில்லை. மாறாக ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.
அதேபோல் கேகேஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்ட பின், உடனடியாக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார். தற்போது ஐபிஎல் தொடரில் களமிறங்க முழு ஃபிட்னஸ் உடன் தயாராகியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹர், பஞ்சாப் அணியின் ராகுல் சஹர் உள்ளிட்டோரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கு முன்பு முழு ஃபிட்னஸுடன் தயாராக அந்தந்த அணிகளின் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் முழு ஃபிட்னஸ் உடன் ஐபிஎல் தொடருக்கு தயாராக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகியே ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் இருவரையும் விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக மும்பை ரசிகர்கள் அவர்களை பொளந்து கட்டி வருகின்றனர்.