மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் தன்னுடைய முதல் போட்டியில் இன்று களமிறங்கி ஏமாற்றத்தை சந்தித்தார்.
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கி விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முதல் வெற்றிக்காக பாடுபடும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய சொந்த மைதானமான வான்கடேவில் டெல்லி கேப்பிட்டல் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து மிகப்பெரிய இலக்கை எட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
ரோகித் சர்மா அபாரமாக ஆடி 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் இசான் கிஷன் அதிரடி காட்டி வந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சூரியகுமார் யாதவும் களமிறங்கினார். காயத்திலிருந்து குணமடைந்துள்ள சூரியகுமார் யாதவ் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கிறார்.
சூரியகுமார் யாதவும் இன்று பெரிய அளவில் சாதிப்பார் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் நம்பினார். ஏனென்றால் சூரிய குமார் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை தடுமாறியது. மும்பை வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் அவர்களால் வெற்றியை பெற முடியாமல் இருந்தது.
இந்த குறையை சூரிய குமார் போக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கேட்ச் ஆகி வெளியேறினார். பவர் பிளேவில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் உள்வட்டத்தை தாண்டி அடிக்க வேண்டும் என ஷார்ட் அடித்தார். ஆனால் அது கேட்ச் ஆக மாறியது. சூரியகுமார் யாதவின் இந்த ஆட்டம் அம்பானி குடும்பத்தினரை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.