மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக தேர்வு செய்திருப்பது தற்போது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் கேப்டனாக இருந்த நிலையில் அவரை மும்பை அணி டிரேட் முறைப்படி வாங்கியது. இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. ரோகித் சர்மாவால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான் விளையாட முடியும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் நினைத்தால் டி20 கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாட முடியும்.
எனினும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருப்பதுதான் முக்கியமாக இருக்கிறது. இதனால் தான் அவரே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகலாம் என முடிவெடுத்திருக்கிறார். விராட் கோலி எப்படி ஆர்சிபி அணியில் இருந்து விலகலாம் என முடிவெடுத்தாரோ அதேபோல் தான் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் மும்பை அணி இந்த முடிவை எடுத்து இருக்காது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று மும்பை அணி வரும் ஐபிஎல் தொடர் குறித்து யோசிக்காமல் அடுத்த 10 ஆண்டுகளில் அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை நோக்கி நகர்ந்து சென்று விட்டது. இளம் வீரர்கள் கேப்டனாக வந்தால் மட்டுமே அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதே போல் ஒரு முடிவை தான் சிஎஸ்கே அணி 2022 ஆம் ஆண்டு எடுத்தது.ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா ஜடேஜா போல் இல்லாமல் ஏற்கனவே கேப்டன் அனுபவம் உள்ளவர்.
ஐபிஎல் தொடரை வென்றவர் என்பதால் மும்பையின் இந்த நகர்வு நிச்சயம் கை கொடுக்கும். இது ரோகித் சர்மாவா எடுக்கப்பட்ட முடிவாக இருந்தால் நிச்சயம் இதை வரவேற்க வேண்டும். அதே சமயம் ரோஹித் சர்மா தாம் கேப்டனாக தொடர விரும்பிய நிலையில் மும்பை இவ்வாறு முடிவு எடுத்திருந்தால் அது நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியதுதான். ஏனென்றால் ஐந்து முறை கோப்பையை வென்று தந்த ஒரு கேப்டனை இவ்வாறு நடத்துவது சரியாக இருக்காது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் தான் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது இந்த நாள் தற்போது அதிரடியாக கேப்டன் மாற்றப்பட்டு இருப்பதால் மும்பை அணியின் பிரபலம் நிச்சயமாக பாதிக்கப்படும். ரோகித் சர்மா ரசிகர்கள் மும்பை அணியை பின்தொடர்வதை நிறுத்தி விடுவார்கள். இது அந்த அணிக்கு பெரும் பாதகத்தை தான் ஏற்படுத்தும். ஆனால் அணி கேப்டன் யார் என்பதை விட வெற்றி, தோல்விதான் மிகவும் முக்கியம். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் இந்த நகர்வு மிகவும் துணிச்சலான முடிவு என்றுதான் பாராட்ட வேண்டும்.