மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பே பல உச்சகட்ட திருப்பங்களை சந்தித்துள்ளது. மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
இந்த ஏலத்திற்கு முன்பே குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி பணம் கொடுத்து வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய குஜராத் அணி நிர்வாகம் ஏலத்திற்கு முன்பே வீரர்களை அணுகி தங்களது அணிக்கு வாங்கி செல்வது சரி இல்லை என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை அதிரடியாக நீக்கி இருக்கிறது . இது மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போது மும்பை அணி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, திறமை வாய்ந்த வீரர்களையும் சூழலை சமாளித்து விளையாடக்கூடிய வீரரையும் வைத்து தான் மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றதாக கூறியிருந்தார்.
இது மும்பை ரசிகர்களை கடுப்படை செய்தது. தற்போது அப்படிப்பட்ட ஒரு வீரரை மும்பை அணியின் கேப்டனாக தேர்ந்தெடுப்பதை எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒரு ஐபிஎல் கோப்பை கூட வெல்ல முடியாமல் திணறி வந்தது.
ஆனால் ரோகித் சர்மா வந்த பிறகுதான் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை வென்றது. இதுவரை மும்பைக்கு 5 கோப்பையை அவர் வென்று கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கேப்டனை ரோகித் சர்மாவே எப்போது விலகிறேன் என முடிவு எடுக்கிறாரோ, அதுவரை மும்பை அணி கேப்டன் பொறுப்பில் வைத்து இருந்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரோகித் சர்மாவுக்கு அவமானம் தரும் வகையில் மும்பை அணி நிர்வாகம் இந்த ஒரு முடிவை எடுத்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.