மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி பதவி அளிக்கப்பட்டதன் மூலமாக, ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணிக்கு நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்த பின், மும்பை அணி நிர்வாகம் பரபரப்பாக இயங்கி வருகிறது. மும்பை அணியில் விரைவில் கேப்டன்சி மாற்றம் நடக்கலாம் என்று பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக கேப்டனை மாற்றுவதாக அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் மும்பை கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, அடுத்தடுத்து 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.

இந்திய அணியின் கேப்டன்சி ரோகித் சர்மாவை தேடி வருவதற்கும் அவர் வென்ற ஐபிஎல் கோப்பைகளே காரணமாக அமைந்தது. இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து மும்பை அணி நிர்வாகம் முக்கிய மாற்றங்களை அணிக்குள் செய்ய தொடங்கியது.
குறிப்பாக ரோகித் சர்மா 37 வயதை எட்டியதால், அவருக்கு பின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டு வந்ததன் மூலமாக, ரோகித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா என்று பேச வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக ரோகித் சர்மா ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை.
அடுத்த டி20 உலகக்கோப்பையின் போது ரோகித் சர்மா 38 வயதை எட்டிவிடுவார் என்பதால், ஃபார்மில் இருப்பாரா, அப்படி இருந்தாலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்து வந்தது. அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி விளையாட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், இனி அவர் சச்சின் எப்படி ஒரு சீசனில் சில போட்டிகளில் மட்டும் விளையாடினாரோ அதேபோல் அடுத்த ஐபிஎல் சீசனில் ரோகித் சர்மா ஆடுவார் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சீசனிலேயே ஒரேயொரு அரைசதம் மட்டுமே ரோகித் சர்மா அடித்திருந்த நிலையில், அடுத்த சீசனில் களமிறங்குவதும் சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.