மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி வலம் வந்தது. ஐபிஎல் வரலாற்றிலே ஐந்து முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 2020 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமான அணியாக விளங்கியது.

எனினும், மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த மூன்று சீசன்களில் தடுமாறியது. இதனால் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினர் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து வாங்கி புதிய கேப்டனாக நியமித்தனர்.
இதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரச்சனைக்கு முதல் காரணமாக அமைந்தது. எனினும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இதையெல்லாம் மறந்து ஒன்றாக விளையாட தொடங்கினர். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சி மற்றும் தவறான யுக்திகள் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி எழுச்சி பெறவே இல்லை.
தொடர்ந்து தோல்விகளை அந்த அணி சந்தித்து வருகிறது.
தற்போது வரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி , 8 தோல்வி என புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. குஜராத் அணியில் இருந்த போது கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் தற்போது அதற்கு நேர்மாறாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பிரச்சனைகள் குறித்து அணி நிர்வாகத்திற்கு நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, சூர்யகுமார், பும்ரா போன்ற வீரர்கள் கடிதம் எழுதியதாக தெரிகிறது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த அம்பானி குடும்பத்தினர், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்! புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்! அவருக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டன் என்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இது சரியாகிவிடும் என்றும் அந்த அணி நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இது ரோகித் சர்மா, பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இதனால் இனி தங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் மரியாதை இல்லை என்றும், இதன் காரணமாக மெகா ஏலத்தில் முன்பு தங்களை அணியை விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் மூன்று வீரர்களும் போர் கொடி தூக்கி இருக்கிறார்கள்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணையில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்காக பல ஸ்டார் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழக்க தயாராகுமா? என்று கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அடுத்து அந்த அணியில் என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.