மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி இருக்கிறது. புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஐபிஎல் தொடங்கி முதல் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த எட்டு ஆண்டுகளில் 5 கோப்பையை வென்று கொடுத்தவர் தான் ரோகித் சர்மா.

இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொத்தாக இருக்க வேண்டிய ரோகித் சர்மாவுக்கு இப்படி ஒரு அவமானத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்திருக்க வேண்டியது இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்று இருக்கிறது.
மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் முன்பு போல் ஜொலிக்கவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. முதலில் ரோஹித் சர்மாவே இந்தப் பதவியை விட்டு விலகியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தான் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதுதான் தற்போது ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஆர் சி பி அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். அவர் தலைமையில் கீழ் ஆர் சி பி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் அவர் பதவியை விட்டு விலக நினைத்தபோது, ஆர்சிபி அணி நிர்வாகமே ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் தோன்றிய விராட் கோலி ஆர் சி பி அணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
அந்த வீடியோ விராட் கோலிக்கு ஆர்சிபி அணி செய்த மரியாதையாக பார்க்கப்பட்டது. ஒரு கோப்பையை கூட வென்று தராத விராட் கோலிக்கு ஆர் சி பி அணி இவ்வளவு மரியாதை கொடுத்து இருக்கும்போது, 5 கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் பதவியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.
ஆனால் மும்பை அணி அவர் செய்த சாதனையை கண்டுகொள்ளாமல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு வீடியோவை வெளியிட்டு ரோகித் சர்மாவை அதில் பேச வைத்திருக்கலாம். அதையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செய்யாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.