மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மே 27 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்தத் தொடரின் 57 லீக் ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதன் பிறகு நடைபெற்ற மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை மட்டுமே வென்றது. இதனால் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

ஆனால் அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, நான்கு வெற்றி, 8 தோல்வி என எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க அணியில் உள்ள சீனியர் வீரர்கள் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?
அணியில் என்ன சிக்கல் இருக்கிறது? எந்த மாற்றங்களை செய்ய வேண்டும்? தொடரை எவ்வாறு முடிக்க வேண்டும் அடுத்த சீசனில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்தும் அணி வீரர்கள் நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுத முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து அணி நிர்வாகி ஒருவர் அளித்த விளக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி குறித்து பெரிய அளவில் தாங்கள் கவலைப்படவில்லை. தலைமை பொறுப்பிலிருந்து ஒருவர் மாறி வேறொருவர் வரும்போது, இது போன்ற சரிவுகள், பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்.
இது விளையாட்டு துறையில் எப்போதும் நடைபெறும் ஒரு விஷயம் தான் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அந்த நிர்வாகி தெரிவித்திருக்கிறார். இதனால் அம்பானி குடும்பம் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு வழங்க இருக்கிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் வேறு அணிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.