மும்பை : ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பேசியுள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை தோனி வெல்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், அளித்துள்ள பேட்டியில் தோனி கேப்டன்சியில் பல மெகா தவறுகளை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இரண்டு கோப்பைகளை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று இருக்கிறார்கள். இது போன்ற சூழலில் களத்தில் கேப்டன் பதற்றமில்லாமல் அமைதியாக இருந்தால்தான் உங்களால் இந்த மாதிரியான போட்டிகளை வெல்ல முடியும்.
இது போன்ற நெருக்கடியான சூழலில் சில கேப்டன்கள் பல தவறுகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தால், இது போன்ற தவறை அவர் செய்தது கிடையாது. இவ்வளவு ஏன் தோனி கூட இதுபோன்ற மெகா தவறுகளை செய்திருக்கிறார். ஒரு முக்கியமான போட்டியில் பவன் நெகிக்கு ஓவர் கொடுத்து அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவி இருக்கிறது.
ஆனால் ரோகித் சர்மா கேப்டன்சியை பார்த்தால் அவர் இது போன்ற தவறுகளை செய்ததே கிடையாது. ஒரு போட்டிக்கு தயாராகுவதை சிம்பிளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தோனி சொல்வார். ஆனால் ரோகித் சர்மா அதை போட்டியிலே செய்து காட்டி இருக்கிறார். மேலும் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற வீரர்கள் மும்பை ஆடுகளத்தில் சிறந்து விளங்கியதற்கு ரோகித் சர்மாவின் ஆதரவு தான் காரணம் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியிருக்கிறார். பார்த்தீவ் பட்டேலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தோனி மீது வன்மத்தை வைத்துக் கொண்டுதான் பார்த்தீவ் இவ்வாறு பேசியிருப்பதாக தோனி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தோனியின் வருகையால் பார்த்தீவ் பட்டேலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனதன் வெளிப்பாடுதான் இந்த கருத்து என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.