பெங்களூரு: மும்பை அணியை சீண்டும் வகையில் "விஸ்வாசம் தான் ராயல்டி" என்ற வீடியோவை ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதில் இருந்தே ஐபிஎல் தொடர் மற்றும் ஏலம் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஏனென்றால் வழக்கமாக ஏலம் தொடர்பான விவாதங்களே அதிகமாக இருந்து வந்த நிலையில், இம்முறை ஏலத்தை காட்டிலும் டிரேடிங் முறையில் மாற்று அணிகளிடம் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனைத்து அணிகளும் முனைப்புடன் உள்ளன.

குறிப்பாக மும்பை அணி தரப்பில் 3 வீரர்கள் டிரேடிங் முறை மாற்றம் செய்தும், ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா வந்த பின்னர், மும்பை அணியின் அடுத்த கேப்டன் அவர்தான் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் ரோகித் சர்மா ஓய்வு பெறும் வரை மும்பை அணி நிர்வாகம் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, உடனடியாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது. இதனால் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனுக்கான மரியாதை கூட மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவுக்கு வழங்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.
அதேபோல் மும்பை அணிக்கு விஸ்வாசமாக இருந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா இருவரையும் விடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் ஆர்சிபி அணி நிர்வாகம் தரமான செயல் ஒன்றை செய்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு வென்றாலும், தோற்றாலும் அதன் ரசிகர்களே அந்த அணியின் பலம் மற்றும் நம்பிக்கையாக உள்ளனர். 16 ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்கு நிகரான உண்மையான மற்றும் விஸ்வாசமான ரசிகர்களின் பட்டாளத்துடன் ஆர்சிபி அணி வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதனை பாராட்டும் வகையில், "விஸ்வாசமாக இருப்பது தான் ராயல்டி" என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வீரர்களை பேக் செய்வதில் தொடங்கி விஸ்வாசமான ரசிகர்கள் வரை ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மும்பை அணியை சீண்டும் வகையில் உருவாக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.