மும்பை : மும்பை அணியின் இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடராமல் இருப்பது பல்வேறு குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இதுவரை ரோகித் சர்மா இணையவில்லை. அவர் மட்டுமல்லாமல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ராவும் இதுவரை இணையாமல் உள்ளார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

5 முறை சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்தற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் போதுமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, எதிர்காலத்தை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
ஹர்திக் பாண்டியாவை அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற முடிவே இதற்கான தொடக்க புள்ளியாக உள்ளது. இந்த முடிவை எடுத்ததில் மும்பை அணியின் ஆலோசகராக உள்ள சச்சின் டெண்டுல்கர் முக்கிய பங்கு வகித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்து தொடர்ச்சியாக ட்வீட் செய்யும் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மாவின் சாதனைகளை மட்டும் பாராட்டாமல் இருந்து வருகிறார்.
இவ்வளவு ஏன், தோனி, விராட் கோலி உள்ளிட்ட அனைவரின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து கூறி வந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த ஆண்டு ஹிட்மேன் பிறந்தநாளில் கூட வாழ்த்தவில்லை. இதற்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மெகா ஏலத்தின் போது மும்பை அணியில் இணைந்த அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த சீசனில் தான் வாய்ப்பு பெற்றார்.
அவரிடம் போதுமான வேகம் இல்லாததால், சில போட்டிகளுக்கு பின் மீண்டும் பெஞ்ச் செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் டெண்டுல்கர் பின் தொடர்வதை நிறுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழக வீரரான சாய் கிஷோரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் அர்ஜுன், ரோகித் சர்மாவை ஃபாலோ செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சச்சின் மற்றும் ரோகித் சர்மா இடையில் மோதல் இருப்பதாக ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.