சென்னை: டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், விரைவில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை மறுநாள் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. எந்த வீரர்களை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், மீண்டும் டிரேடிங் முறை தொடங்குவது தான் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, திடீரென மும்பை அணிக்கு திரும்பியிருப்பது பல்வேறு புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதால், மும்பை அணியின் சீனியர் வீரர்களான பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு அனாலிஸ்ட்டாக இருந்த பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், நீல நிறம் கொண்ட ஜெர்சியை அணிந்த அணியில் இருந்து மஞ்சள் நிறத்தை ஜெர்சியாக கொண்ட அணிக்கு முக்கிய வீரர் மாற போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஒருவேளை இந்த டிரேட் வெற்றிகரமாக முடிவடைந்தாலும், இரு அணிகளுக்கும் நன்மை ஏற்படும் என்று பதிவிட்டுள்ளார்.
இது ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியில் இருந்து பும்ரா, ரோகித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 3 பேரில் யாரேனும் சிஎஸ்கே அணிக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் டெல்லி அணியும் நீல நிற ஜெர்சியை தான் பயன்படுத்தி வருகிறது.
அண்மை காலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தோனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். தோனியின் வீட்டு நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் ரிஷப் பண்ட் கட்டாயமாக இருந்து வருகிறார். அடுத்த சீசனுடன் தோனி ஓய்வுபெறும் நிலையில், அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ஐ கொண்டு தோனியின் இடத்தை நிரப்ப சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக பார்க்கப்படுகிறது.