மும்பை: மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை எந்த வாழ்த்தும் கூறாதது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக 10 ஆண்டுகள் வழிநடத்தி 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் வளர்ச்சிக்கு பின் ரோகித் சர்மாவின் பங்கு அளவிட முடியாதது என்றே சொல்லலாம். அதே போல் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மாவிற்கு 36 வயதாகும் பட்சத்தில், எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மும்பை அணி நிர்வாகம் கேப்டனை மாற்றும் முடிவை எடுத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்த போதே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு விரைவாக வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் மும்பை அணியை பின் தொடர்வதை நிறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இன்னொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து ரோகித் சர்மா அவருக்கு எந்த வாழ்த்தும் இதுவரை கூறவில்லை. கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகி 15 மணி நேரத்திற்கு மேலாகியும் ரோகித் சர்மா சமூக வலைதளங்களில் கூட எந்த பதிவையும் இடவில்லை.
இதனால் கேப்டன்சி நீக்கம் பற்றி ரோகித் சர்மாவுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடர் நெருங்கும் போது கேப்டன்சி மாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இப்போதே மும்பை அணி அறிவித்தது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.