Rohit Wife Ritika : மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது ரோகித் சர்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி 2008 முதல் 2012 ஆம் ஆண்டு சீசன் வரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் தடுமாறி வந்தது.
ஆனால் ரோகித் சர்மா வந்த பிறகு ஐந்து முறை கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு சீசனுக்கு பிறகு மூன்று தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது.

அதிலும் கோப்பையை வெல்லவில்லை. மேலும் ஒரு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா தடுமாறி வந்ததால் அவரை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்துள்ள விளக்கத்தில் ரோகித் சர்மா கடந்த சில சீசனங்களாக பேட்ஸ்மேனாக தடுமாறி வருவதாக குறிப்பிட்டார்.
அவருடைய பேட்டிங் திறன் அணிக்கு தேவை என்பதால் முழு சுதந்திரத்துடன் அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த முடிவுக்கு பின் முழுக்க முழுக்க கிரிக்கெட் காரணங்கள் மட்டும்தான் இருப்பதாகவும் ரோகித் சர்மாவை ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியிருந்தார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் மனைவியான ரித்திகா தன்னுடைய கோபத்தை வெளிப்படையாக மும்பை இந்தியன்ஸ் அணி மீது வெளியிட்டு இருக்கிறார். மார்க் பவுச்சர்-இன் இந்த பேட்டியில் பல விஷயங்கள் தவறாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் மீது ரோகித் சர்மா ரசிகர்கள் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் மார்க் பவுச்சர் இவ்வாறு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இதில் பல விஷயங்கள் தவறாக இருக்கிறது என்று பதிவிட்டு இருப்பதன் மூலம் உண்மையில் வேறு பிரச்சனை மும்பை அணிக்கும் ரோஹித்துக்கும் இருக்கிறது. ஆனால் இவர்கள் சப்பை கட்டு கட்டுகிறார்கள் என்பது போல் ரித்திகாவின் பதிவு அமைந்திருக்கிறது.
இதனால் இந்த பிரச்சனை மேலும் சூடு பிடித்திருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவின் குடும்பம் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அதிருப்தியில் இருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. இதன் காரணமாக நடப்பு சீசனில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை மரியாதையாக மும்பை இந்தியன்ஸ் அணி நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.