சென்னை: சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், ரோகித் சர்மாவுக்கு சிஎஸ்கே ஜெர்சியை அணிவித்து உருவாக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கூட அறிவிக்காத சூழலில், மும்பை அணி அடுத்த கட்ட மாற்றத்தை செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணி தரப்பில் எதிர்காலத்திற்கு மாற்றம் என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா தரப்பில் இதுவரை எந்த வாழ்த்தும் கூறவில்லை. இத்தனைக்கும் சஞ்சு சாம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது, முதல் வீரராக ரோகித் சர்மா வாழ்த்து கூறி வரவேற்றவர். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்காக ஒரு வீடியோவோ அல்லது பதிவோ கூட ரோகித் சர்மா பதிவிடவில்லை.
அதுமட்டுமல்லாமல் சக மும்பை வீரர்களான சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி அறிவிப்புக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் கீழ் இதுவரை ரோகித் சர்மா விளையாடியதில்லை. இதனால் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் மீண்டும் டிரேடிங் முறைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரோகித் சர்மா அணி மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத், ரோகித் சர்மாவுக்கு சிஎஸ்கே ஜெர்சியை அணிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் "ஒருவேளை நடந்தால்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ரோகித் சர்மா 36 வயதை எட்டிவிட்டதால், அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு ரோகித் சர்மா விளையாடினால் சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்கான வரவேற்பு உச்சத்தில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம் என்று கூறலாம்.