மும்பை: மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ள நிலையில், அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கோபமடைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். 36 வயதாகும் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் மும்பை அணி நிர்வாகம் தரப்பில் டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தது.

குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக மும்பை அணி நிர்வாகம், அவரை மீண்டும் கொண்டு வர முடிவு செய்ததாக பார்க்கப்பட்டது. இருந்தாலும் குஜராத் அணி நிர்வாகிகளிடம் அதிக விளம்பர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொள்ளப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது.
இதே கோரிக்கையை ஹர்திக் பாண்டியா மும்பை அணி நிர்வாகத்திடம் வைத்த போது, அவர்கள் ஏற்று கொண்டதோடு, ரோகித் சர்மாவுக்கு பின் கேப்டன்சியையும் அளிக்க முன் வந்ததாக பார்க்கப்படுகிறது. இப்படி இரு வழியாக ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தனது இன்ஸ்டாகிராமில், சில நேரங்களில் அமைதியே மிகச்சிறந்த முடிவு என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஹர்திக் பாண்டியாவை அணிக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், கேப்டன்சி பதவியை அவருக்கு அளிக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் தொடக்க காலம் முதலே மும்பை அணிக்கு ஆடி வந்தாலும், ஹர்திக் பாண்டியா 2 ஆண்டுகள் குஜராத் அணிக்கு சென்றுவிட்டார். இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் சீனியர் வீரரான பும்ராவுக்கே கேப்டன்சி பதவி வழங்கப்படும் என்று பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் டெஸ்ட் அணிக்கு பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டு வந்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா இல்லாத போது, பும்ரா முன்நின்று வழி நடத்தினார். அண்மையில் கூட அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சிறப்பாக கேப்டன்சி பதவியை மேற்கொண்டிருந்தார். இதனால் அடுத்த கேப்டனுக்கான தகுதியை பும்ரா வளர்த்து வந்த போது, திடீரென ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.