மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் அணியாக தொடரை விட்டு ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 11ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும், வரும் 17ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட உள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரும் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் மே 17ஆம் தேதிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா,பும்ரா சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கு தற்போது ஓய்வு வழங்கினால் சுமார் பத்து நாட்கள் இந்த வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் பங்கேற்பதற்கு இந்த நான்கு வீரர்களும் தயாராக முடியும். சுமார் ஒன்றரை மாதம் தொடர்ந்து கடும் வெயிலில் இந்த நான்கு வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள். மேலும் இந்தியா முழுவதும் அலைந்து இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் மனசோர்வு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டதால், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நான்கு வீரர்களையும் பயன்படுத்தாமல் இருந்தால் அது இந்திய அணிக்கு மிகவும் பலமாக அமையும்.
ஆனால் நாட்டுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி ஒரு தியாகத்தை செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூழலை புரிந்து கொண்டு பிசிசிஐ இந்த நான்கு வீரர்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் நாடா? இல்லை சுயநலமா என்ற எந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பின் ரசிகர்கள் உள்ளனர்.