மும்பை : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரர் கிடைத்துவிட்டார் என சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் கபில் தேவ் மட்டும் கொஞ்சம் பொறுமை காணுங்கள் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் மூன்று சதங்களை விளாசி இருக்கிறார். மேலும் நடப்பு சீசனில் கில் 851 ரன்கள் அடித்து இருக்கிறார். கவாஸ்கர், சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக்,விராட் கோலி போன்றவர்களெல்லாம் இந்திய கிரிக்கெட்டை ஆண்டார்கள்.

தற்போது அதேபோன்று ஒரு பேட்டிங்கை சுப்மன் கில்லும் வெளிப்படுத்தி அந்த வரிசையில் வருவது போல் தெரிகிறது. ஆனால் நான் அவசரப்பட்டு இவ்வளவு பெரிய ஒப்பீட்டை நான் செய்ய மாட்டேன். இதேபோன்று அவரால் இன்னும் இரண்டு சீசன்கள் விளையாடினால் மட்டுமே அவ்வளவு பெரிய ஒப்பிட்டை என்னால் செய்ய முடியும். கண்டிப்பாக சுப்மன் கில்லிடம் திறமை இருக்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இதே போன்று அடுத்த சீசனிலும் அவர் சிறப்பாக விளையாடினால் கவாஸ்கர், சச்சின், கோலிக்கு பிறகு சுப்மன் கில்லையும் நாம் அந்த வரிசையில் சேர்க்கலாம். பந்துவீச்சாளர்கள் முதலில் கில்லிடம் என்ன குறை இருக்கிறது என்று கண்டுபிடிப்பார்கள். அதையும் மீறி உங்களால் மூன்று நான்கு சீசன்கள் சிறப்பாக விளையாட முடிந்தால் நீங்கள் நிச்சயமாக சிறந்த வீரர் தான் என்று சொல்லலாம்.தற்போது சுப்மன் கில், நல்ல பார்மில் இருக்கிறார். இதை அவர் எவ்வளவு தூரம் தொடர்ந்து மேற்கொள்வார் என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வளவு ரன்கள் அடித்தும் ஃபார்மில் இருந்து சரிந்து அவர் மீண்டும் ரன் குவிக்கும் பாதைக்கு திரும்புகிறாரா என்று பார்க்க வேண்டும். சூரிய குமார் யாதவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிறந்த சீசனுக்கு பிறகு தொடர்ந்து மூன்று கோல்டன் டக் ஆனார். ஆனால் தற்போது மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டு இருக்கிறார். இதனால் இது போன்ற வீரர்களை நாம் வெகுவாக பாராட்டுகிறோம்.எனவே சுப்மன் கில்லும், இதுபோன்று சரிவை சந்தித்து மீண்டு வருகிறாரா என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் இப்படி பேசுகிறேன் என்று என்னை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நான் யாரையும் ஒப்பிடவில்லை. இருப்பினும் உங்களுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் குறித்து நினைவுபடுத்துகிறேன். வினோத் காம்பிளி இந்தியாவிலே மிக சிறந்த சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்கத்தை பெற்றிருந்தார். ஆனால் அதன் பிறகு வினோத் காம்பிளியின் சரிவு தொடங்கியது. அதிலிருந்து அவர் மீண்டு வரவில்லை. இதனால் கில் இளம் வயதில் தமக்கு கிடைத்திருக்கும் இந்த பெயர் ,புகழை அவர் எப்படி கையாளுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.