மும்பை : கடந்த சில காலமாக பார்மில் இல்லாமல் தவித்த வெங்கடேஷ் ஐயர், நடப்பு ஐபிஎல் சீசனில் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்பி உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துவிட்டது. எனினும் அதன் பிறகு காயம், பார்ம் அவுட் போன்ற காரணத்தால், இந்திய அணியில் தமது இடத்தை இழந்தார். கடந்த சீசனில் 12 போட்டியில் மட்டும் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், வெறும் 182 ரன்கள் மட்டுமே அடித்தார்.

எனினும் நடப்பு சீசனில் வெங்கடேஷ் ஐயர் தனது பழைய பார்மை மீட்டு எடுத்தார். பஞ்சாப்க்கு எதிராக 34 ரன்களும், பெங்களூருக்கு எதிராக 3 ரன்களும் எடுத்த வெங்கடேஷ் ஐயர், குஜராத்துக்கு எதிராக 83 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்தார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸக்கு எதிராக வெங்கடேஷ் ஐயர் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
காலில் அடிப்பட்டும், அதனை கண்டுகொள்ளாத வெங்கடேஷ் ஐயர், மும்பை பந்துவீச்சை சிதற அடித்தார். வெங்கடேஷ் ஐயரை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை வீரர்கள் தடுமாறினர். தனது உயரத்தை பயன்படுத்தி கொண்டு, பந்தை லாவகமாக வெங்கடேஷ் சிக்சருக்கு அடித்தார். 49 பந்துகளை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர், 100 ரன்களை விளாசியுள்ளார், இதில் 9 சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.