அகமதபாபாத் : உலக கிரிக்கெட்டின் அடுத்த கிங் உருவாகிவிட்டார் என்பதை இன்றைய ஐபில் ஆட்டத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார் சுப்மன் கில். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆப் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளது.
இதில் தொடக்க வீரர் சுப்மன் கில் பேயாட்டம் ஆடினார். இவரை ஆட்டம் இழக்க வைக்க மும்பை எடுத்த எந்த முயற்சியும் துளி கூட பலன் அளிக்கவில்லை.32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்த சுப்மன் கில், அடுத்த 17 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார்.

அதாவது 49 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்திருக்கிறார். முடிவில் 60 பந்துகளில் 129 ரன்களை சுப்மன் கில் விளாசி இருக்கிறார். இதில் 10 சிக்ஸர்களும், ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.சுப்மன் கில் இந்த இன்னிங்ஸ் மூலம் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஐபிஎல் பிளே ஆப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார்.
இதன் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய ஷேவாக் 122 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் வாட்சன் 117 ரன்கள் அடித்தும் சாகா 115 ரன்கள் அடித்தும் முரளி விஜய் 113 ரன்கள் அடித்தும் ரஜத் கட்டிடார் 112 அடித்தும் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதேபோன்று பிளே ஆப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் இன்று படைத்திருக்கிறார். ஷேவாக், சாகா, கெயில், வாட்சன் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இருந்த நிலையில் இந்த ரெக்கார்டு அனைத்தையும் சுப்மன் கில் இன்று உடைத்து இருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 973 ரன்களும், ஜாஸ் பட்லர் 863 ரன்களும் சுப்மன் கில் நடப்பாண்டில் 851 ரன்களும் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று பிளே ஆப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டத்தில் சுப்மன் கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி ஜாஸ் பட்லருக்கு பிறகு சுப்மன் கில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார்.