மும்பை: மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய போது இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும், சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வை ரசிகர்கள் கொடுப்பார்கள். அதுபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் கூடுவார்கள் என்று மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

16 வருட ஐபிஎல் வரலாற்றில் இருபெரும் வெற்றிகரமான அணிகள் என்றால் சென்னையும், மும்பையும் தான். 5 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்த்து 4 முறையில் சாம்பியனான சென்னை அணி, வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் இன்று விளையாடவுள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் மோதிய போட்டிகள், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது.
இதனால் இன்றையப் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி குஜராத்திடம் தோல்வியடைந்தாலும், லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் மும்பை அணி பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

சொந்த மண்ணில் களமிறங்குவதால் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்திலும் மும்பை அணி உள்ளது. இதனிடையே தோனியை காண்பதற்காக சென்னை அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவருகின்றனர். ஏற்கனவே சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டை என்றாலும், அகமதாபாத் மைதானத்திலும் மஞ்சள் படை சூழ்ந்தது எதிரணி வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வான்கடே மைதானத்தை மும்பை அணியின் கோட்டையாக காட்டுவதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தரப்பில், இரு முக்கிய ஸ்டாண்டுகளில் மும்பை ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் கூடி வருவது பற்றி மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து கூறியுள்ளார்.

அதில் பொல்லார்ட் கூறுகையில், மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும், எங்கள் அணி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது போல் ரசிகர்கள் ஆதரவு இருக்கும். அப்படியான ஆதரவு, சமகாலத்தில் தோனிக்கு கிடைத்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும், சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயமாக கூடுவார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காக தோனி அவ்வளவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.