அகமதாபாத்: மும்பை அணியின் இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் கூடிய விரைவில் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசுவார் என்று ஆஸி. ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணி அகமதாபாத் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனால் உள்ளூர் வீரர் பியூஷ் சாவ்லா உட்பட மும்பை வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்களை விட்டுக் கொடுத்து மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் மீதான விமர்சனங்களுக்கு ஆஸி. ஜாம்பவான் வீரர் பிரெட் லீ பதிலடி கொடுத்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு குறித்து பிரெட் லீ பேசுகையில், அர்ஜுன் டெண்டுல்கரால் அனைத்துவிதமான பந்துகளையும் வீச முடியும் என்றே நினைக்கிறேன். அவரின் பந்துவீச்சை என்னை கவர்ந்துள்ளது என்றே கூறுவேன். புதிய பந்தில் அற்புதமாக வீசுகிறார். பவர் பிளே ஓவர்களில் அவரால் சிறப்பாக ஸ்விங் செய்ய முடிகிறது. மிடில் ஓவர்களில் தைரியமாக பந்தை வீசுகிறார். போதுமான அனுபவம் கிடைத்த பின் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவார்.
ரசிகர்கள் அனைத்தையும் விமர்சிப்பார்கள். அர்ஜுன் டெண்டுல்கருக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. இன்னும் முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் விளையாட உள்ளார். அர்ஜுனுக்கு என் அறிவுரை என்னவென்றால், யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க தேவையில்லை. சச்சினை போல் அர்ஜுனின் பாதையையும் கடினமாக இருக்க போகிறது. இருப்பினும் அர்ஜுன் டெண்டுல்கர் திறமைகளை கொண்டுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் கூடிய விரைவில் 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார். மும்பை அணி சூழலும், அனுபவமும் கிடைத்த பின்னரும், அவரின் வேகம் நிச்சயம் அதிகரிக்கும். எனக்கு அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அவரால் எந்த அளவிற்கு வேகமாக வீச முடியும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
அர்ஜுன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாரோ, அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் பலரும் தங்கள் வாழ்க்கையில் பந்தை தொட்டு வீசி இருக்க கூட மாட்டார்கள். பலரும் கீ போர்டு போராளிகள் தான் என்று தெரிவித்துள்ளார்.