அணி வீரர்கள் பாராட்டு
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் அந்த அணி வீரர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாக விளங்குகிறார். இதுகுறித்து அணி வீரர்கள் அவ்வப்போது தங்களது மலரும் நினைவுகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய பொறுமையான அணுகுமுறையால் அந்த அணி 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வெல்லவும் அவர் காரணமாக இருந்துள்ளார்.
ஐபிஎல் கோப்பைகளே சாட்சி
வெளிப்படையாக பார்க்கும்போது அவர் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் காட்சியளித்தாலும் உண்மையில் தான் எடுத்துக் கொள்ளும் விஷயங்களை தீவிரமாக கையாளுவார் என்று அந்த அணியின் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் வெற்றி கொண்டுள்ள ஐபிஎல் கோப்பைகளே சாட்சியாக உள்ளது.
அதிக தன்னம்பிக்கையை அளிக்கிறது
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் விளையாடுவது தனக்கு அதிகப்படியான தன்னம்பிக்கையை அளிப்பதாக அணியின் முக்கிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். அவரின்கீழ் விளையாடும்போது அதிகப்படியான சுதந்திரம் கிடைக்கும் என்றும் அதை தான் மிகவும் என்ஜாய் செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
முடிவுகளை ஆதரிக்கும் ரோகித்
அவர் தன்னுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி ஆடுமாறு எப்போதும் கூறுவார் என்றும் இதுவே தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை அதிகப்படுத்தி தான் எதை செய்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அதை எதிர்கொள்ள தன்னை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். மைதானத்தில் நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளை ரோகித் நம்பிக்கையுடன் ஆதரிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.