மும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது 36-வது வயதிலும் இளம் வீரர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்து வரும் அஸ்வின் டி20 கிரிக்கெட்டிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில் மும்பை அணி ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றி பெற வேண்டிய சூழலில் இருந்தது.

ஆனால் அஸ்வின் ஓவரில் மட்டும் மும்பை அணியால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை. நான்கு ஓவர்கள் வீசிய அஸ்வின் 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு விக்கெட்களும் அடங்கும். இதன் மூலம் அஸ்வின் ஒரு மகத்தான சாதனையை படைத்தார். நேற்று ஆட்டத்தில் இஷான் கிசன் மற்றும் அதிரடி வீரர் கேமரூன் கிரீன் ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் படைத்தார். 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை இந்திய வீரர் சாகல் முதலாவதாக அடைந்தார். தற்போது அந்த பட்டியலில் அஸ்வினும் இணைந்திருக்கிறார். 273 டி20 போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை சாகல் வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வினை பொருத்தவரை 350 டி20 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் அஸ்வின் 193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மலிங்காவின் சாதனையை அஸ்வின் சமம் செய்திருக்கிறார். இந்தப் பட்டியலில் 183 விக்கெட்டுகளுடன் பிராவோ முதலிடத்திலும் 178 விக்கெட்களுடன் சாகுல் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். எனினும் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.