மும்பை : பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் திரும்பிய இந்திய நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா மட்டும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கடந்த சில மாதங்களாக படுதோல்வியை தழுவியது.
கடைசியாக விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெறவில்லை.

இதனால் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ரஞ்சி போட்டிக்கு திரும்ப வேண்டும் என பிசிசிஐ சாட்டையை சுழற்றி இருக்கிறது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி போட்டிக்கு திரும்பிய ரோகித் சர்மா மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைப் போன்று நட்சத்திர வீரர்கள் ஜெய்ஸ்வால் 4 ரன்களும் ரிஷப் பன்ட் ஒரு ரன்னிலும், கில் நான்கு ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும் ,ரஹானே 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இப்படி இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொதப்பினர். இந்த சூழலில் டெல்லி சௌராஷ்டிரா அணிக்கு இடையிலான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய ஜடேஜா அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஸ் தூல்,ஆயுஸ் பதோனி, சனத் சங்வான் ஹரிஷ் தியாகி, நவதிப் சைனி ஆகியோரின் விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். 17.4 ஓவர்கள் வீசிய ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி 66 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் டெல்லி அணி 188 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து சௌராஷ்டிரா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் புஜாரா 21 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆறு ரன்களை சேர்த்தார். புஜாரா இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில் கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.