மும்பை: ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு 6வது முறையாகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் ஆயுஷ் மத்ரேவுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை அளித்துக் கௌரவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்று, தாய்நாடு திரும்பிய இந்திய இளம் வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே, சச்சின் டெண்டுல்கரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆயுஷ் மத்ரேவின் தலைமையையும் ஆட்டத்தையும் பாராட்டிய சச்சின், தான் அணிந்திருந்த இந்திய அணியின் 'டெஸ்ட் ஜெர்சி' ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார். அந்த ஜெர்சியில் தனது கையெழுத்திட்ட சச்சின், "அன்புள்ள ஆயுஷ், உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்ற குறிப்பையும் எழுதி வழங்கினார்.
தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக இதைக் கருதுவதாக ஆயுஷ் மத்ரே, இது தொடர்பான காணொளியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "உங்களை திரையில் பார்த்தே நான் வளர்ந்தேன். ஆனால் இன்று உங்கள் வீட்டில், உங்கள் பயணத்தின் ஒரு அங்கமான இந்த ஜெர்சியை என் கையில் ஏந்தி நிற்கிறேன். இந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி சார். இந்திய கிரிக்கெட்டை நீங்கள் எவ்வளவு மரியாதையுடன் சுமந்தீர்களோ, அதே மரியாதையுடன் நானும் இதைச் சுமப்பேன்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மும்பை திரும்பிய ஆயுஷ் மத்ரேவுக்கு, அவர் வசிக்கும் விரார் பகுதியில் மேள தாளங்களுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் எனப் பெரும் திரளானோர் அவரை வரவேற்றனர். அதேபோல டெல்லி திரும்பிய மற்றொரு வீரரான உத்தவ் மோகனுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தத் தொடரில் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஆயுஷ் மத்ரே சிறப்பாகச் செயல்பட்டார். அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 62 ரன்களும், இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 53 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தொடர் முழுவதும் 7 இன்னிங்ஸ்களில் 214 ரன்களை அவர் குவித்துள்ளார்.
ஏற்கனவே இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் விளாசி உலகக் கவனத்தை ஈர்த்த நிலையில், அணியை வழிநடத்திய கேப்டன் ஆயுஷ் மத்ரேவுக்கு சச்சின் டெண்டுல்கரே நேரில் அழைத்து அங்கீகாரம் அளித்திருப்பது இளம் வீரர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.