அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் சுப்மன் கில் 60 பந்துகளை எதிர் கொண்டு 129 ரன்களை விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகளும், பத்து சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் பிளே ஆப் சுற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர், பிளே ஆப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற பல சாதனைகளை சுப்மன் கில் படைத்திருக்கிறார்.

இவரது இன்னிங்ஸின் மூலம் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது கிடைத்தது. அப்போது பேசிய கில், என்னுடைய வெற்றிக்கு காரணம் சூழலுக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்கிறேன். ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்த பிறகு இது என்னுடைய நாள் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. இதனால் அதிக ரன்கள் தரக்கூடிய ஷாட்டுகளை ஆடினேன். கிரிக்கெட் வீரராக நாம் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். நம்பிக்கை முக்கியமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல சர்வதேச கிரிக்கெட் சீசனுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வெற்றி என்பது சாதாரணமாக கிடைக்கவில்லை. இதற்கு பல விஷயங்கள் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய போது தான் எனக்குள் இந்த மாற்றம் ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டவுடன் அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிங்கில் நான் பல மாற்றங்களை செய்தேன். என்னுடைய யுக்திகளை மாற்றினேன்.
என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். ஐபிஎல் தொடரில் நான் ஆடியதில் இதுதான் சிறந்த இன்னிங்ஸாக நான் கருதுகிறேன். நான் ஆரஞ்சு தொப்பியை வென்று விட்டேன் என்று எனக்கு தெரியாது. நான் பாத்ரூம் சென்று விட்டேன். விளையாடும்போது நிறைய வியர்வை கண்ணுக்குள் சென்று விட்டது .
பவுண்டரிகள் பெரிதாக இருந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால் டபுள்ஸ் ஓடி ரன் சேர்க்க வேண்டும். எந்த பவுண்டரி சிறியதாக இருக்கிறது என்பதை கவனித்து விளையாட வேண்டும். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது என்று சுப்மன் கில் கூறினார்.