மும்பை: மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை அணி தற்போது ஏழு போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் மும்பை அணி தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை செய்து ஆக வேண்டும். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா தற்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு அவர் தயாராக வேண்டும். தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு லீக் தொடர் முடியும் தருவாயில் ரோகித் சர்மா அணிக்கு மீண்டும் திரும்பலாம். ஆனால் தற்போது ரோகித் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும்.
களத்தில் பார்க்கும்போது ரோகித் சர்மா கொஞ்சம் டென்ஷனாகவே இருப்பது போல் தெரிகிறது. அவருடைய சிந்தனை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு அது சரியாக தெரியவில்லை. என்னைக் கேட்டால் ரோகித் சர்மா ஒரு மூன்று நான்கு போட்டிகளுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பலமாக அவர் அணிக்குள் திரும்பலாம். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் ஏதேனும் அதிசயம் நடந்தால் தான் உண்டு. தற்போது உள்ள நிலவரப்படி மும்பை அணி புள்ளி பட்டியலில் 4வது இடம் வரை வரலாம். ஆனால் அதற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக விளையாடிய இரண்டு சீசன்களிலும் பிளே ஆப்க்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.