மும்பை: குஜராத் அணியின் முகமது ஷமி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் அடித்த அபார சிக்சரை சிலாகித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் அபார சதமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்32 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.

இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்சர் ஒன்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முகமது ஷமி வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவ் பந்தை நேராக அடிப்பது பேட்டை கத்தி போல் மாற்றி பந்தை தேர்ட் மேன் திசையில் சிக்சராக்கினார்.
அதற்கேற்றவாறு பொசிஷனில் எந்த மாற்றங்களையும் சூர்யகுமார் யாதவ் செய்யவே இல்லை. நேராக மின் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் நின்று கொண்டு பேட்டையும் எந்த திசையிலும் கொண்டு செல்லாமல் ஆங்கிள் செய்து சிக்சர் அடித்தது ஏராளமான கிரிக்கெட் வீரர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. இதனை நேரில் பார்த்த சச்சின் டெண்டுல்கரே, மிரண்டு போய் சக வீரர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பின்னர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் ஆடிய அத்தனை ஷாட்களும் சிறந்தவை. ஆனால் முகமது ஷமி பந்துவீச்சில் தேர்ட் மேன் திசையில் அடித்த அந்த சிக்சர் தான் மிரள வைத்துவிட்டது. ஆங்கிளை உருவாக்குவதற்காக பேட்டில் பிளேடு போல் இருக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தி சிக்சர் விளாசியது தான் அந்த ஷார் அபாரம்.
அதுபோன்ற ஷாட்களை விளையாடுவது மிக மிக கடினம். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் மிக சிலரே அதுபோன்ற ஷாட்களை விளையாடி இருக்கிறார்கள். அப்படியான ஷாட்டை தான் சூர்யகுமார் யாதவ் விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். வீரர்களின் சிறந்த ஆட்டத்தை சச்சின் பலமுறை பாராட்டி இருந்தாலும், முதல்முறையாக ஒரு ஷாட்டை பாராட்டி சச்சின் பாராட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.