அகமதாபாத்: பவுலிங்கின் போது டெத் ஓவர்களும், பேட்டிங்கின் போது தொடக்கமும் சரியாக அமையவில்லை என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடியது. 5 முறை சாம்பியன் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் அணி ஆடியதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் விளாசினர். கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை சேர்த்து அசத்தினர்.

இதையடுத்து பிரம்மாண்ட இலக்கை விரட்டிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பை அணியின் டாப் ஆர்டர் 5 விக்கெட்டுகள் முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே வீழ்ந்தது. இதன் காரணமாக குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 2 தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது.
இந்த தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், பவுலிங்கின் போது எங்கள் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் உள்ளது. எங்களின் பலம் எங்கள் பேட்டிங் வரிசை தான். அதன் காரணமாக தான் சேஸிங்கை தேர்வு செய்கிறோம். ஆனால் இன்று எங்களின் நாளாக அமையவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு இருந்தது. யாராவது ஒரு பேட்ஸ்மேனாவது இறுதி வரை நின்று விளையாடி இருக்க வேண்டும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 215 ரன்கள் இலக்கை விரட்டிய போது, கடைசி ஓவரில் தான் தோல்வியடைந்தோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் எங்களின் தொடக்கமே சரியாக இல்லை. 200 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டும் போது, இப்படியான தொடக்கம் கொடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. கடைசி 7 ஓவர்களில் பேட்டிங் செய்வதற்குய் எங்களிடம் பேட்ஸ்மேன்களே இல்லை என்ற நிலை தான் இருந்தது. இந்த தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.