டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதேபோல் மும்பை அணியில் ஐபிஎல் அனுபவம் இல்லாத வீரர்கள் விளையாடுவதால், அணியில் உடனடி மாற்றம் இருக்காது என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், ஷோக்கீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மும்பை அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 25 இன்னிங்ஸ்களுக்கு பின் ரோகித் சர்மா அரைசதம் விளாசியதால், மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியையும் மும்பை அணி பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா கூறுகையில், முதல் போட்டியில் இருந்தே வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறோம். முதல் வெற்றி எப்போதும் ஸ்பெஷலானது தான்.
அண்மையில் டெல்லி மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆடி இருந்தோம். அப்போது இந்த பிட்ச் வேறு மாதிரி இருந்தது. இந்த பிட்ச்சில் ஸ்லோ ஸ்பின்னர்கள் முக்கியமாக இருந்தனர். மும்பை அணியை ஸ்பின்னர்கள் தான் காப்பாற்றினர். அதேபோல் சேஸிங்கில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். பவர் பிளே ஓவர்களை பயன்படுத்துவதே என் திட்டமாக இருந்தது. அதேபோல் திலக் வர்மாவுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது.

மும்பை அணியில் ஐபிஎல் அனுபவமில்லாத பல வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் திறன் மீது நம்பிக்கை வைப்பது முக்கியமானது. அவர்களின் மன உறுதியை அதிகரிப்பது முக்கியமான உள்ளது. அதேபோல் ஓய்வறையிலும் சிறந்த அனுபவத்தை கொடுக்க முயற்சித்து வருகிறோம். அதேபோல் சில போட்டிகளில் தவறு செய்வதால், உடனடியாக மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். இதனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்க இன்னுல் சில காலம் ஆகும் என்று பார்க்கப்படுகிறது.