வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தகராறு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் கடந்த பல வருடங்களாக சம்பளம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. அதற்கு முக்கிய காரணம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் சம்பளம் மிக குறைவு. அதே சமயம் ஐபிஎல் போன்ற தொடர்களில் கிடைக்கும் பணம் அவர்கள் தரும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். இதனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மறுத்து வருகிறார்கள். டி20 போட்டிகள் என்றால் அந்த நாட்டின் அத்தனை சிறந்த வீரரும் அதில் பங்கேற்கிறார்கள். டெஸ்ட் என்றால் தெறித்து ஓடி விடுகிறார்கள்.
ஐபிஎல் தான் முக்கியம்
இது பற்றி வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்ததை விட இப்போது டி20 லீக்-களின் எண்ணிக்கை அதிகம். இது வெஸ்ட் இண்டீஸை மிகவும் பாதிக்கும். பல இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏதாவது ஒரு ஐபிஎல் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே உச்சகட்ட குறிக்கோளாக வைத்துள்ளனர்" என கூறினார்.
விளையாட மறுக்கும் வீரர்கள்
டி20 லீக்-களில் ஆடுவதால் ஏற்பட்ட சம்பள தகராறு காரணமாக கிறிஸ் கெயில், பிராவோ, கீரான் பொல்லார்ட், சுனில் நரைன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆடுவதில்லை. இது பற்றி பேசினார் ஹூப்பர். "ஐபிஎல் வெறும் ஆறு வாரங்கள் மட்டுமே. ஆனால், எங்கள் அணியில் சுனில் நரைன் கடைசியாக 2013இல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். அப்போது அவர் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் டெஸ்டில் ஆடவில்லை. அதே போலவே கெயில் மற்றும் பொல்லார்ட்டும் இருக்கின்றனர்" என நடைமுறை பிரச்சனை பற்றி குறிப்பிட்டு பேசினார். இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெ.இண்டீஸ் கிரிக்கெட் பிரச்சனை
ஒரு முக்கிய பிரச்சனையை சரி செய்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மேம்படும் எனவும் கூறினார் ஹூப்பர். "இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் நல்ல நிலையில் உள்ளது. அதனால் தான் உங்களால், இளம் வயதில் ப்ரித்வி ஷாவை சர்வதேச போட்டியில் சோதித்து பார்க்க முடிகிறது. ஆனால், எங்கள் கிரிக்கெட்டில் அண்டர் 16 மற்றும் அண்டர் 19 அளவில் நாங்கள் பெரிய அளவில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது" என கூறினார்.