மும்பை: இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவது அவருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லது என்று மும்பை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இருப்பினும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தான் அணியில் எதிர்முனையில் ஆடிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தாலும், தனியாளாக போராடி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.

கடந்த சில சீசன்களாக பவர் பிளே ஓவர்களுக்கு பின் ரன்கள் சேர்க்க கஷ்டப்பட்டு வந்த ஜெய்ஸ்வால், நடப்பு சீசனில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்திய அணிக்கு இன்னொரு கங்குலி கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் ஜெய்ஸ்வாலை பாராட்டி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், இந்தப் போட்டியில் நாங்கள் சேஸிங் செய்த விதம் நிறைவாக உள்ளது. கடந்தப் போட்டியிலும் இதேபோல் அருகில் வந்து தோல்வியடைந்தோம். பொல்லார்ட் போன்ற ஜாம்பவான் வீரரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால் டிம் டேவிட்டிற்கு அந்த திறமை உள்ளது. ஃபினிஷிங் ரோலில் பவர் ஹிட்டர் களமிறங்கி இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, பவுலர்களை தொடர்ந்து சிந்திக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு போட்டியிலும் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்படுவது கேப்டனாக சிரமமாகவே உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் பிட்ச் மற்றும் அணிகளுக்கு ஏற்பவே அணியை தேர்வு செய்ய முடியும். எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் எப்ப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆர்ச்சரிடம் இருந்து நல்ல வேகத்தை நீண்ட நாட்களுக்கு பின் இன்று பார்க்க முடிந்தது. சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுபோன்ற ஆட்டம் அவருக்கு கைவந்த கலை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஜெய்ஸ்வால் பற்றி ரோகித் சர்மா பேசுகையில், ஜெய்ஸ்வாலை கடந்த சீசனிலேயே பார்த்தேன். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டம் வேறு லெவலில் உள்ளது. அவரிடம் எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகிறது என்று கேள்வி கேட்டேன். அதற்கு ஜெய்ஸ்வால், ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளார். அவரின் டைமிங் அற்புதமாக உள்ளது. இதுபோல் கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு நல்லது என்பதோடு, இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லது, ராஜஸ்தான் அணிக்கும் நல்லது என்று தெரிவித்தார்.