மும்பை : மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா அந்த அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் நேரடியாக அகமதாபாத்திற்கு வருவதாக கூறியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் புதிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஐபிஎல் தொடரையொட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அந்த அணியை பொளந்து கட்டி வருகின்றனர். இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி நியமனமே காரணமாக அமைந்துள்ளது.

மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா, திடீரென பதவி நீக்கப்பட்டார். அதேபோல் குஜராத் அணியில் இருந்த போது மும்பை அணியை மோசமாக விமர்சித்த ஹர்திக் பாண்டியா, திடீரென மும்பை அணிக்கே யூ-டர்ன் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணி ஒப்பந்தம் செய்த போது, கேப்டன்சி பதவி கண்டிப்பாக தேவை என்று ஹர்திக் பாண்டியா அறிவுறுத்தியதாக தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா கம்பேக் மற்றும் கேப்டன்சி நியமனத்தை சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரசிக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் மூவருமே இந்திய அணியை வழி நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே இருந்தனர்.
இதனால் மும்பை அணியில் கோஷ்டி பூசல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா கூட பயிற்சி முகாமிற்கு தாமதமாகவே வந்தார். இருப்பினும் இதுவரை மும்பை பயிற்சி முகாமில் பும்ரா வந்து சேரவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பும்ரா அகமதாபாத்தில் மும்பை அணியுடன் இணைவதாக தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான மனநிலையில் பும்ரா இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சீசனில் மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு பார்வையாளராக வந்த பும்ரா, இம்முறை மும்பை அணியின் பயிற்சி முகாமிற்கு கூட வரவில்லை. குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக பும்ரா இப்படி கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடருக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பும்ரா பங்கேற்று வருவதையும் பார்க்க முடிகிறது.