
தடுமாறிய SRH
இப்போட்டியில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், 2வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் - ஜேஸன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். எனினும், ஹர்ஷல் படேல் வீசிய ஸ்லோ பந்தில் வில்லியம்சன் 31 ரன்களில் போல்டானார். பிறகு, ப்ரியம் கார்க் 15 ரன்களில் கிறிஸ்டியன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த ஜேஸன் ராய், கிறிஸ்டியன் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு சமத் ஒரேயொரு ரன்னில், சாஹல் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, சாஹா வெறும் 10 ரன்களில் தூக்கி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

உம்ரான் மாலிக்
எளிதான டார்கெட்டை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அட்டகாசமான பவுண்டரி அடித்து ஆட்டத்தை துவக்கிய கேப்டன் கோலி, அதே ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, மீண்டும் ஒன் டவுன் களமிறக்கப்பட்ட டேனியல் கிறிஸ்டியன், மீண்டும் பெரும் ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் ரன்னே எடுக்காமல் அவுட்டான கிறிஸ்டியன், இப்போட்டியில் ஜஸ்ட் 1 ரன் மட்டும் எடுத்து, கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 18 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஜம்மு & காஷ்மீர் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார். 12 ரன்களில் ஸ்ரீகர் பரத், உம்ரான் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார்.

மணிக்கு 153.கி.மீ வேகம்
ஐபிஎல் தொடரில், உம்ரான் மாலிக் கைப்பற்றும் முதல் விக்கெட் இதுவேயாகும். ஐபிஎல் தொடரிலேயே இதுதான் அவரது இரண்டாவது போட்டியாகும். அவர் வீசிய முதல் ஓவரில், பெரும்பாலான பந்துகள் மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் பறந்தன. அப்படியொரு வேகமான பவுன்ஸ் பந்தில் தான் பரத் அவுட்டானார். அதற்கு அடுத்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் பந்துகள் அனைத்தும் என்று மணிக்கு 151, 152, 153 கி.மீ வேகத்தில் தெறித்தன. எனினும், இதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த மேக்ஸ்வெல் - தேவ்தத் படிக்கல் இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்டனர். 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ரஷீத் கான் ஓவரில் கேட்ச்சானார்.

ஏபிடி நின்றும் தோல்வி
எனினும், அதன் பிறகு டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தும், ஆர்சிபி அணியால் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ் குமார் வீசிய அந்த ஓவரில் டி வில்லியர்ஸால் ஒரேயொரு சிக்ஸ் மட்டும் தான் அடிக்க முடிந்தது. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 13 போட்டிகளில் விளையாடி தங்களது 5வது தோல்வியை பெங்களூரு பதிவு செய்தது. ஏற்கனவே பிளே ஆஃப்க்கு ஆர்சிபி தகுதிப் பெற்றுவிட்டதால், எந்த வகையிலும் இந்த தோல்வி அவர்களை பாதிக்காது. ஆனால், இப்போது சிக்கல் என்னவெனில், ஆர்சிபி அணியால் டாப் 2 இடத்திற்கு செல்வது மிக மிக கடினமாகும். நாளை (அக்.7) பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை தோற்று, நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் டெல்லிக்கு எதிராக ஆர்சிபி ஜெயித்தால் கூட அவர்களால் டாப் 2 இடங்களுக்குள் செல்ல முடியாது. ஏனெனில், சென்னைக்கும், பெங்களூருவுக்கு இடையேயான ரன் ரேட்டில் அவ்வளவு தொலைவு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











